மு இராமனாதன்
First published in Thinnai on Thursday July 5, 2007
பிரம்மனுக்கு நான்கு தலைகள்
மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள்
கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம்.
நல்லுலகிற்கு வெளியேயும்
தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும்.
அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும்.
மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி
சில நூறு கரங்கள் நீண்டன.
திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது.
பக்கத்து ஊர்களிலிருந்தும்
பக்தர்கள் திரண்டனர்.
கோயில் வாசலில்
தோரணங்கள் போஸ்டர்கள்
தெய்வத்தின் படம் பொறித்த டி ஷர்டுகள்
லட்சார்ச்சனைகள்.
தெய்வத்திற்கு இன்னும் பிரீதியானது
விசில் வழிபாடு.
முந்தைய தெய்வங்களுக்கும்
அதுவே ஆகி வந்தது.
பக்தர்களுக்கும் தெரிந்திருந்தது.
ஆண்டவன் பிரவேசிக்கும்போது
உச்சத்திற்குப் போனது குலவை.
அசுர வதம் நிகழும்போதும்.
என்றாலும் இன்னும் வழிபாடுகள் உள்ளன.
நல்லுலகைப் பார்த்து
பக்தர்கள் கற்பது நன்று.
தீபாராதனை
திருஷ்டிப் பூசணிக்காய்
பூச்சொறிதல்
பாலாபிஷேகம்
பீர் அபிஷேகம்.
சாத்துப்படிகள் தொடர்ந்தால்
தெய்வமே பக்தியை மெச்சக்கூடும்.
–நன்றி: திண்ணை ஜூலை 5, 2007