Arunachalam awarded Pravasi Bharathiya Samman Award

அருணாச்சலத்திற்கு பிரவசி பாரதிய சம்மான் விருது 

ஹாங்காங் வணிகரும் தொழிலதிபருமான திரு. எம். அருணாச்சலத்திற்கு இந்திய அரசு, சிறந்த வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்படும்  ‘பிரவசி பாராதிய சம்மான்’ விருதினை ஜனவரி 2005இல் வழங்கியது. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 19 மார்ச் 2005 அன்று அவருக்குப் பாராட்டு விழா நிகழ்த்தியது. அது போது மு இராமனாதன் வழங்கிய பாராட்டுரை.

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்!

‘பிரவசி பாரதிய சம்மான்’ என்கிற இந்த விருது திரு.அருணாச்சலம் அவர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி, மும்பையிலே நடந்த வெளிநாட்டு இந்தியர்கள் மாநாட்டில் நமது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் 9ஆம் தேதி மும்பை நகருக்கு மிகவும் முக்கியமானது. இந்திய வரலாற்றிலேயும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 90 ஆண்டுகளுக்கு முன்னால்- 1914இல்- இதே ஜனவரி மாதம் 9ஆம் தேதிதான் தென்ஆப்பிரிக்காவில் இருந்து காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். மும்பைத் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த ஒரு கப்பலின் சரிவான படிக்கட்டுகளில் இறங்கி வந்த அந்தக் கெச்சலான மனிதரை வரவேற்பதற்காக மக்கள் திரளாகக் குழுமியிருந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களைக் குறித்த செய்திகள் சமுத்திரங்களைத் கடந்து இந்தியர்களை எட்டியிருந்தது. அதுவே மும்பையின் அப்பல்லோ பந்தரில் அவர்களைக் குழுமச் செய்திருந்தது.

அதற்குச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், வரலாற்று நூல்களில் இடம் பிடித்திருக்கிற 1893ஆம் ஆண்டு ஜீன் 7ஆம் தேதியன்று, தென்னாப்பிரிக்காவின் ஒரு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் காந்தியடிகள் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு கறுப்பனுக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி, ஒரு வெள்ளை அதிகாரி் அவரைப் பிடித்துத் தள்ளி விட்டது அந்த இரவிலேதான். ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷனில், பனி பெய்து கொண்டிருந்த அந்த இரவில், தனது உடையில் படிந்திருந்த தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு எழுந்த அந்த மனிதர்தான், நாளதுவரை இந்தியாவின் மிகச் சிறந்த வெளிநாட்டு இந்தியன் என்று கொண்டாடப்படுகிறார். அதற்குப் பின்னால், தென்னாப்ரிக்காவில் அவர் நிறவெறிக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் பிரசித்தி பெற்றவை.

நெல்சன் மண்டேலா ஒரு முறை சொன்னார்: “1893இல் இந்தியா எங்கள் தேசத்துக்கு ஒரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அனுப்பி வைத்தது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1913இல் இந்தியாவிற்கு நாங்கள் திருப்பி அனுப்பி வைத்தது மகாத்மா காந்தியை.” இப்படிச் சொன்னார் மண்டேலா. இதற்கு அப்துல் கலாம் சொல்கிறார்- “இது தான் இந்தியாவின் சிறப்பு”. அதாவது, செல்லுகிற இடத்துக்கு வளங்கள் சேர்ப்பது. இப்படி வளப்படுத்துவது என்பது நமது பராம்பரியத்தின் மூலமாக, அறிவின் மூலமாக, பண்பின் மூலமாக, கலாச்சாரத்தின் மூலமாக, சிந்துகிற வியர்வையின் மூலமாக, உழைப்பின் மூலமாக, ஈட்டுகிற பொருளின் மூலமாக, இந்தியர்கள் எங்கு போனாலும் தாங்கள் செல்லுகிற இடத்தைச் சிறப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று பூமிப்பந்து முழுவதும் படர்ந்திருக்கிறார்கள். 102 தேசங்களில் 2 1/2 கோடி இந்தியர்கள் பரவியிருப்பதாகச் சொல்லுகிறது அரசின் புள்ளிவிபரம். இவர்களைப் பாராட்டுகிற விதமாக, இவர்களுடைய சேவையை அங்கீகரிக்கிற விதமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அரசாங்கம் வெளிநாட்டு இந்தியர்களுக்கான ஒரு மாநாட்டை நடத்தத் துவங்கியது. இந்த மாநாட்டின் கடைசி நாளன்று, இந்த வெளிநாட்டு இந்தியர்களில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்ககளில் ஆகச் சிறந்து விளங்கும் 12 பேரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் வழக்கத்தையும் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு பிரவசி பாரதிய திவஸ் என்றும், இந்த விருதுகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் என்றும் பெயரிட்டது.

2003ஆவது ஆண்டு, அதாவது இந்த மாநாடு நடக்கத் தொடங்கிய ஆண்டு, விருது வாங்கியவர்கள் பட்டியலைப் பார்த்தால், அதில் மலேசியாவின் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமுவேலின் பெயர் இருக்கிறது. பொது நல நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளர் ராம் பாலின் பெயர் இருக்கிறது. ஹாங்காங் பிரமுகர், பல்வேறு வணிகக் குழுமங்களின் தலைவர் ஹரி லீலாவின் பெயர் இருக்கிறது. 2004இன் பட்டியலில் விண்வெளி வீராங்கனை, அல்பாயசிலே மரித்துப் போன கல்பனா சாவ்லாவின் பெயர் இருக்கிறது. எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீண்ட நாள் அலுவலருமான டாக்டர் சசி தாரூரின் பெயர் இருக்கிறது. கெல்லாக் மேலாண்மைப் பள்ளியின் தலைவர், பேராசிரியர் தீபக் ஜெயினின் பெயர் இருக்கிறது.

ஆனால் எனக்கென்னவோ, இந்த 2003, 2004 ஆண்டுகளின் விருதுப் பட்டியல்களைப் பார்க்கிலும், 2005இன் விருதுப் பட்டியல்தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலேதான் ஆங்கில இலக்கியத்தில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிற A Suitable Boyஇன் ஆசிரியர் விக்ரம் சேத்தின் பெயர் இருக்கிறது. தன்னுடைய Sixth Sense படத்தின் மூலம் ஹாலிவுட்டில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் பெயர் இருக்கிறது. தொலைத் தொடர்புத் துறையிலே பல புரட்சிகளைச் செய்த சாம் பிட்ரோடாவின் பெயர் இருக்கிறது. கோல்ஃப் வீரர் விஜய் சிங்கின் பெயர் இருக்கிறது. அந்தப் பட்டியலிலேதான், அன்பு நெஞ்சங்களே! ஹாங்காங் தமிழர் அருணாச்சலத்தின் பெயர் இருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னால், இந்த ஹாங்காங் மண்ணிலே ஒரு வங்கி அலுவலராகக் காலடி எடுத்து வைத்தார் அருணாச்சலம். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் அவர் வர்த்தகத் துறையிலே புகுந்தார். பிறகு ஆங்கிலத்திலே சொல்லுவது போல அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவரது வணிகம் பல்கிப் பெருகியது. இப்போது அவர் ஒரு தொழிலதிபராகவும் உயர்ந்திருக்கிறார். இன்றைக்கு அவர் தொடாத துறைகள் இல்லை. தளவாடங்களில் இருந்து தானியங்கள் வரை, மென்பொருள்களில் இருந்து தோல் பொருட்கள் வரை, காகிதங்களிலிருந்து ஆடை அணிகலன்கள் வரை, பலவற்றிலேயும் அவர் தடம் பதித்திருக்கிறார்.

அவர் இந்திய வணிகக் குழுமத்தின் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியது நம் எல்லோருக்கும் தெரியும். ஹாங்காங்கிலே இருக்கும் இந்தியன் சேம்பர் பல விதத்திலேயும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் சீனா, ஹாங்காங் , மக்காவ் மற்றும் தைவான் ஆகிய சீன மண்ணின் பரந்துபட்ட பகுதிகள் அனைத்திலுமாக இருக்கிற ஒரே ஒரு இந்தியன் சேம்பர், ஹாங்காங்கிலே இருக்கிற இந்தியன் சேம்பர் என்பதால், அதனுடைய வர்த்தக முக்கியத்துவமும், அதனுடைய அரசியல் முக்கியத்துவமும் அதிகம். அவர் தலைவராக இருந்த போது தொழில் முனைவோருக்காக, இந்தியாவிலே தொழில் தொடங்க விரும்புகிற ஐரோப்பியர்களுக்கும், சீனர்களுக்கும் பல கருத்தரங்குகளை நடத்தினார். 2003இல் அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்தபோது ஹாங்காங் வணிகர்களைத் தலைமையேற்று பெய்ஜிங்கிற்கு அழைத்துச் சென்றார் அருணாச்சலம். அதனுடைய தொடர்ச்சியாக பெய்ஜிங்கிலே இந்தியத் தூதரகமும், CIIயும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் அவர் முன்கை எடுத்துச் செயல்பட்டார். அந்தக் கருத்தரங்கு பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு சீனர்கள் இந்தியாவைச் சென்று பார்க்க விரும்பிய போது, அந்தத் தொழில் முனைவோரையும் வணிகர்களையும் அழைத்துக் கொண்டு இந்தியாவைக் காட்டுகிற பொறுப்பையும் அருணாச்சலமே மேற்கொண்டார். தொடர்ந்து இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் பயணப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கி இருக்கிறார். ஹாங்காங் அரசாங்கத்தின் Trade and Industry Advisory Boardஇல் அங்கம் வகிக்கிறார். ஹாங்காங்கில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அரசின் ஆதரவோடு இயங்கி வரும் Invest HKஇல் Investment Ambassador ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் பல்வேறு வர்த்தகக் குழுக்களிலே அங்கத்தினராக, தலைவராக, ஆலோசகராக இருக்கிறார். 

அவருக்கு இந்த விருது கிடைத்தவுடன் எல்லோரையும் போல எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு விருது கிடைத்தற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். அவரோடு இருபதாண்டு காலம் நண்பராக இருக்கிற ஒருவர் சொன்னார்: “அவர் படோடபம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறார். இந்தப் பண்பு விருதுக் குழுவினரை கவர்ந்திருக்க வேண்டும்”. உண்மைதான். அவரது எளிமை நமக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால் இன்னும் ஆழமான காரணம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தியத் தூதரகத்தின் ஒரு உயரதிகாரி சொன்னார்: “இந்தியாவுக்கும், சீனாவுக்குமான ஒரு வர்த்தகப் பாலமாக அவர் விளங்குகிறார். இந்திய அரசாங்கம் நியமிக்காத ஒரு அம்பாசிடராக அவர் செயல்படுகிறார்.” ஆனால் இன்னும் நுணுக்கமான காரணம் இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. 

கடந்த சில ஆண்டுகளாக நான் அவரோடு பழகி வருகிறேன். பலமுறை அவரோடு பேசியிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களிலே எங்களுடைய உரையாடல் அதிக நேரம் நீண்டுமிருக்கிறது. நாங்கள் பேசுவதெல்லாம் திரும்பத் திரும்ப இந்தியாவைச் சுற்றித்தான் இருக்கும். இந்தியாவினுடைய உள் கட்டமைப்பு, இந்தியாவின் தொழில் துறை, இந்தியாவின் அரசியல்… இப்படி. அப்போதெல்லாம் நான் தொடர்ந்து ஒரு விஷயத்தைக் கவனித்து வந்திருக்கிறேன். இதை நான் அவர் உட்பட வேறு யாரிடமும் இதுவரை சொன்னதில்லை. என்றாலும் இந்த அரங்கத்திலே அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்படி இந்தியாவைப் பற்றி பேசின எல்லாச் சந்தர்ப்பங்களிலும், ஒரு முறை கூட, நண்பர்களே, ஒரு முறை கூட, அவர் இந்தியாவைத் தரம் தாழ்த்திப் பேசியதில்லை. Bloody Indian என்கிற மாதிரிச் சொற்றொடர்கள் அவர் நாவிலே புரண்டு, தரையிலே விழுந்து நான் கேட்டதில்லை. நான் நினைக்கிறேன், இந்தத் தேசப்பற்றுதான் விருதுக் குழுவினரைக் கவர்ந்திருக்க வேண்டும். 

இன்றைக்கு தொழில் துறையிலே அவர் உலகம் முழுக்கக் கிளை பரப்பியிருக்கிறார். இந்தியா, ஹாங்காங், சீனா, கிழக்காசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று பல நாடுகளிலே இன்றைக்கு அவருடைய வர்த்தகமும், தொழிலும் பரவியிருக்கிறது. என்றாலும் கூட அவர் இன்றைக்கும் மனதிற்குள், மதுரைக்கு 75 கிலோ மீட்டர் வடக்கே இருக்கிற பள்ளத்தூர் கிராமத்தின் அருணாச்சலமாகத்தான் இருக்கிறார். அப்படி பள்ளத்தூர் அருணாச்சலமாக இருப்பதில் அவர் பெருமைப்படுகிறார். இந்தப் பண்புதான் விருதுக் குழுவினரைக் கவர்ந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த விருதைப் பெற்றவர்களில் பலருக்கும் அருணாச்சலத்திற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் சாதனையாளர்கள்தாம். அவர்களில் பலரும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்தாம். இந்தியப் பெயர்களை சூட்டிக் கொண்டிருப்பவர்கள்தாம். ஆனால் அவர்களில் பலருக்கு அதற்கு மேல் தாய் நாட்டோடு குறிப்பிடத்தக்க உறவு ஏதுமில்லை. ஆனால் அருணாச்சலத்திற்கு அந்த உறவு தொப்புள்கொடி உறவைப் போன்றது. காலம் கருதி ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 2001ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தில் கொண்டாட்டங்கள் ஏதும் நடக்கவில்லை. அன்றுதான் குஜராத்தின் பூஜ் பகுதியை மையமாகக் கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுசூரத், அகமதாபாத், ராஜ்கோட், கட்ச் உள்பட குஜராத்தின் பல மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்தது. இருபதாயிரம் பேர் மடிந்தனர். ஒன்றரை லட்சம் பேர் காயமடைந்தனர். லட்சக் கணக்கானோர் வீடிழந்தனர். ஈரமுள்ள நெஞ்செல்லாம் பதறியது. உள்நாட்டு இந்தியர்களைப் போலவே வெளிநாட்டு இந்தியர்களும் உதவிக் கரம் நீட்டினர். அருணாச்சலம் தனது பங்கிற்கு ஒரு காசோலையை அனுப்பிவிட்டு வீட்டோடு வாசலோடு இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஆசியா பசிபிக் வர்த்தகர்கள் பலரை ஒன்றிணைத்து குஜராத்திற்கு அழைத்துச் சென்றார். தகர்ந்து தரை மட்டமாகிய வீடுகளையும, சாலைகளையும், ரயில் தடங்களையும், பாலங்களையும் சீரமைக்கும் பணியில், அந்த வர்த்தகர்கள் நிதியுதவியின் மூலமாகவும் பொருட்களை நேரடியாக வழங்கியதன் மூலமாகவும் தங்களை இணைத்துக் கொண்டனர். அதற்குக் காரணமாக இருந்தவர் அருணாச்சலம். அவரது கிளைகள் எங்கெல்லாம் படர்ந்திருந்தாலும், வேர்கள் தாய்மண்ணில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

உங்களிடம் இருந்து விடை பெறுவதற்கு முன்னால், இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆங்கிலத்திலே ஒரு சொற்றொடர் உண்டு. “ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்”. இதைக் கேட்கிற போதெல்லாம் எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றும். ஒன்று : இதைச் சொன்னது நிச்சயமாக ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும். இரண்டு : உலகமெங்கிலும் உள்ள ஆண்கள் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறார்கள். ஆண்கள் எப்போதும் வெற்றியாளர்களாக முன்னாலேயே இருப்பார்கள். பெண்கள் சமயலறையின் ஈரக் கைகளைத் தன்னுடைய புடவை முந்தானையிலேயோ, துப்பட்டாவிலேயோ , ஏப்ரானிலேயோ துடைத்துக் கொண்டு பின்னாலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஆண் வர்க்கத்தினுடைய கருத்து அது என்று எனக்குத் தோன்றுகிறது. எது எப்படியானாலும், திருமதி. அபிராமி அவர்கள், அருணாச்சலத்திற்குப் பின்னால் அல்ல, அவரோடு இணைவாக, தோளோடு தோள் கொடுத்து, சமதையாக, அவருடைய எல்லா வெற்றிகளிலும் அவருடன் கூடவே இருக்கிறார். இந்த விருதிலும், இந்தப் பாராட்டிலும், இதற்குப் பின்னால் இருக்கிற உழைப்பிலும் அபிராமி அவர்களுக்கு சரிநிகர் சமானமான பங்குண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.

அருணாச்சலம் அவர்களே! நீங்கள் இன்னும் பல வெற்றிகளை ஈட்ட வேண்டும். இன்னும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் 200 தமிழ்க் குடும்பங்களின் சார்பாக மனமார வாழ்த்தி, இந்த வாழ்த்தைச் சொல்வதற்கு எனக்கு வாய்ப்பினை வழங்கிய தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்திற்கு நன்றி சொல்லி, சிரத்தையோடு கேட்ட உங்கள் அத்துணை பேருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன். 

நன்றி ! வணக்கம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: